“இந்தப் பேச்செல்லாம் அரசியல்ல நல்லதில்ல; தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது” - நிர்மலா சீதாராமன்

தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக அரசை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்புதிய தலைமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 2 - 3 நாட்களுக்கு அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தனித்தீவுகளாக காட்சியளித்தன.

நிர்மலா சீதாராமன்
துண்டிக்கப்பட்ட வழித்தடங்கள்... நெல்லை - திருச்செந்தூர் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

இந்நிலையில், இந்த பாதிப்புகள் குறித்தும் நிதி ஒதுக்கீடு குறித்தும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சனாதன தர்ம பிரச்னையின்போது, ‘நாங்கள் அழிக்க வரவில்லை, ஒழிக்க வந்துள்ளோம்’ என்றனர். இப்போது ‘அப்பன் வீட்டு பணத்தில் நிதி கொடுக்கிறார்களா’ என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களின் பாஷை அப்படித்தான். நாங்கள் கேட்க முடியுமா? இப்படியான பேச்செல்லாம் அரசியல்ல நல்லதில்ல” எனக்கூறி மிகக்கடுமையான வார்த்தைகளால் திமுகவை சாடி பேசினார். அந்தக் காணொளியை, கீழே காணலாம்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “4 மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் திணறும்போது, நிவாரணப் பணிகளில் ஈடுபடாமல் டெல்லியில் இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது. உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை; மாநில பேரிடராக அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும்.

இப்படியான பாதிப்புகளை தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை; இனி அறிவிக்கவும் இயலாது. தமிழக அரசை பொறுத்தவரை, மழைக்கு முன் 92% வடிகால் பணி முடிந்ததாக கூறினர்; மழைக்கு பின் 42% பணிகளே நிறைவு என மாற்றி பேசினர்.

சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவிட்ட ரூ.4,000 கோடி என்னவானது? எங்கே போனது?

தென்மாவட்டங்களில் மழை குறித்து டிச.12ஆம் தேதியே இந்திய வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

நிர்மலா சீதாராமன்
மழை பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டதாக உயர் நீதிமன்றம், திமுக பாராட்டு!

மழை பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழக அதிகாரிகள் விரைந்து செயல்படவில்லை; பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் தாமதமாகவே சென்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படை செல்வதற்கு முன் தமிழக அதிகாரிகள் யாரும் மீட்புப் பணியில் இல்லை.

டிச.12ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் எச்சரிக்கை வழங்கியது இந்திய வானிலை மையம். மழை குறித்த முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை என கூறுவது தவறானது.

நிர்மலா சீதாராமன்
"வானிலை அறிவிப்புகளில் மேலும் துல்லியம், விரைவு தேவை" - அமைச்சர் மனோ தங்கராஜ்

மழை, வெள்ளத்தில் சிக்கிய மொத்தம் 42,290 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 9 ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; விமானப்படை, கடற்படை மூலமும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன.

ரூ. 6,000 நிதி குறித்து நிர்மலா சீதாராமன் கேள்வி
ரூ. 6,000 நிதி குறித்து நிர்மலா சீதாராமன் கேள்வி

தமிழக அரசு ரூ.6,000 நிவாரணத் தொகையை வங்கிக்கணக்கு மூலம் அளிக்கலாமே; ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்? ரூ.6,000 ரொக்கமாக வழங்கியதற்கு பதில் வங்கியில் செலுத்தினால் வெளிப்படைத்தன்மை இருக்கும்” என்றார்.

நிர்மலா சீதாராமனின் முழுமையான செய்தியாளர் சந்திப்பை, கீழ் இணைக்கப்படும் வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com