மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்து முதல் முறையாக ஒருங்கிணைந்த பட்ஜெட் ஆக இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
ரயில்வே பட்ஜெட்டில் ரயில் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், இரட்டை ரயில் பாதை திட்டம் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் நெல்லைக்கு பகல் நேர ரயில் சேவை அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் ரயில் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, மதுரை - நாகர்கோயில் வரை இரட்டை ரயில் பாதை திட்டம், சென்னை - நெல்லைக்கு கூடுதல் ரயில் சேவை, நெல்லையிலிருந்து சென்னை, திருவனந்தபுரத்துக்கு பகல் நேர ரயில் சேவை, திருச்சி - நெல்லை இடையேயான ரயில் சேவையை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு, வியாபாரிகளின் வசதிக்காக பகல் நேர ரயில் சேவை போன்ற முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.