இந்த மெட்ரோ ரயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
சென்னை சுரங்க ரயில் சேவை துவக்க விழா இன்று காலை நடந்தது. சுரங்க ரயில் சேவையை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தொடங்கி வைத்தனர். விழாவில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் ஜெயகுமார், செங்கோட்டையன், உதயகுமார் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, ’மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது. அனைத்து மாநிலங்களுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு விரும்புகிறது. என்னை தமிழக அரசின் நண்பர் என்று ஜெயலலிதா கூறுவார். இந்த மேடையில் அவர் இல்லாததது வருத்தமாக இருக்கிறது. அரசியலை தாண்டி நான் மதிக்கும் ஆற்றல் மிக்கத் தலைவர் ஜெயலலிதா. மெட்ரோ ரயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. அவரது கனவுகளை நனவாக்க மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். 2ம் கட்ட மெட்ரோவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். பொதுமக்களின் போக்குவரத்தில் மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கும். டெல்லி போன்ற நகரங்களில் மெட்ரோ ரயிலில்தான் நான் பயணிக்கிறேன்’ என்றார்.