உக்ரைன் விவகாரம்: கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் எம்பி.; பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர்
உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பயண ஏற்பாடுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எம்பி-களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின், இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, பயண ஏற்பாடுகள் பற்றி தமிழ்நாடு முழுவதும் இருந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அமைச்சக அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறேன்.
பெற்றோருடன் அங்கிருந்து தொடர்பு கொள்பவர்களின் அலைபேசியில் சார்ஜ் தீர்ந்து விடுவதால், பயணத்தின் நடுவே சார்ஜ் போட முடியாமல் பேச முடியாமல் போகிறது. இது பதட்டத்தை மேலும் அதிகரிக்கிறது. தற்போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் அரசு தரப்பு ஏற்பாடுகள் பற்றி விவரித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ருமேனியா, போலந்து, ஹங்கேரி, சுலோவெகியா எல்லைகள் வழியாக வருபவர்களுக்கு தொடர்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும், வெளியுறவு அமைச்சகத்தின் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நான்கு நாடுகளின் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ள உதவி தொலைபேசி எண்கள், இ மெயில், வாட்ஸ் அப் எண்கள் தரப்பட்டுள்ளன. இது தவிர குறிப்பான கவலைகள், தகவல்கள் இருப்பின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தின் இ மெயில், தொலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளன.
பெற்றோரிடம் இருந்து வரும் தகவல்கள் உரிய மட்டத்திற்கு என்னுடைய நாடாளுமன்ற அலுவலகத்தின் மூலமாகவும் கொண்டு செல்லப்படும். இந்திய குடிமக்கள் அனைவரும் ஊறு ஏதும் இல்லாமல் பாதுகாக்கப்படவும், பயணங்கள் அமையவும் தொடர்ந்து முயற்சிகளை அமைச்சக மட்டத்தில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார்.