உடுமலை | மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா - பக்திப் பரவசத்தோடு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வருடந்தோறும் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 1ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கிய தேர்த் திருவிழா தொடர்ந்து 8ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி அதன்பின் தினந்தோறும் பக்தர்கள் கம்பத்துக்கு தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு முன்பாக, அம்மன் திருக்கல்யாணம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை அருள்மிகு மாரியம்மன் சூலத்தேவருடன் திருத் தேருக்கு எழுந்தருழுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
மாரியம்மன் கோயில் தேரோட்டம் தளி ரோடு, குட்டை திடல், தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் கோயிலை வந்தடையும். திருத்தேரை காண உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உடுமலை நகரில் குவிந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.