கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி உதவி
மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என பல தரப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கஜாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த விவசாயிகள், பொதுமக்கள் என எல்லோரையும் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு மக்களின் பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் குரல் எழுப்பப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளையும் வழங்கிய போது முன்னாள் அமைச்சர் ரகுபதி, எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.