1 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை.. ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்!
காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதல்ல என தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக தவெக மகளிரணி புகார் அளித்ததால், 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தஞ்சை போலீஸ் சென்னையில் கைது செய்தது. தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று, செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தஞ்சை போலீஸார் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு போலீஸ் வாகனம் மூலம் சாலைவழியாக தஞ்சாவூருக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட காவல்நிலையத்தில் திமுகவினர் அதிகளவில் திரண்டதால் அங்குசெல்லாமல் அருகிலுள்ள செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு உதயநிதி கொண்டுசெல்லப்பட்டார்.
இந்தசூழலில் அங்குவைத்து உதயநிதியிடம் மாலை 6.50 மணிக்கு தொடங்கிய விசாரணை, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று 8.10 மணிக்கு முடிந்தது. விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். கொட்டும் மழையிலும் காவல்நிலையத்திற்கு வெளியே காத்திருந்த தொண்டர்களை பார்த்த உதயநிதி கையசைத்து உற்சாகப்படுத்தினார். திருச்சி விமான நிலையத்தில் சற்றுநேரத்தில் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
