காரை எடுத்துக்கோங்க... ஆனா கமலாலயம் போயிறாதீங்க...! - உதயநிதி பேச்சால் சிரிப்பலை
காரை எடுத்துக்கோங்க... ஆனா கமலாலயம் போயிறாதீங்க... என்ற உதயநிதி பேச்சால் தமிழக சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
இன்று சட்டப்பேரவையில் கேள்வி - பதில் நேரத்தில் பேசிய சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், ’’இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களில் நம்பர் 1 முதலமைச்சர் என்று பெயரெடுத்து திராவிட மாடல் ஆட்சியை அமைத்து வரும் முதலமைச்சருக்கு நன்றி. எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி. கடந்த முறை பேசும்போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது பேசுகையில் அவையில் இருப்பதற்கு நன்றி. அப்படி வெளிநடப்பு செய்து சென்றாலும், என்னுடைய காரில்தான் தவறுதலாக ஏறுகிறீர்கள். அடுத்தமுறை தாராளமாக என் காரை எடுத்து செல்லலாம்;ஆனால் கமலாலயம் சென்றுவிட வேண்டாம்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ’’எங்கள் கார் எப்போதும் எம்.ஜி.ஆர். மாளிகை நோக்கியே செல்லும்’’ என்று கூறினார்.
பின்னர் பேச்சைத் தொடர்ந்த உதயநிதி, ‘’நானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உங்கள் காரில் தவறுதலாக ஏறிச்செல்ல பார்த்தேன். கேள்வி நேரத்தில் நான் தொல்லை செய்வது இல்லை. எனவே கூடுதலாக 5 நிமிடம் பேச சபாநாயகர் நேரம் ஒதுக்க வேண்டும். அரசுத்துறைகள் குறித்து ஓரளவு சில விஷயங்களை தெரிந்து வைத்திருந்தேன். என் தொகுதியில் தெரு, தெருவாக வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி கோரிக்கையை கேட்டறிந்தோம். ஆற்காடு இளவரசர் இல்லமாக இருந்தாலும் சரி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பாக இருந்தாலும் சரி...அங்கெல்லாம் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டோம்.
பயிற்சிப் பட்டறையாகவே சட்டமன்ற தொகுதி பணிகளை பார்க்கிறேன். தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பியதே, திமுக ஆட்சி அமைத்தற்கு முக்கிய காரணம். மக்கள் மனுவுடன் என்னை துரத்த, தீர்வை நோக்கி நான் துறை அமைச்சர்களை துரத்த, இதன் காரணமாகவே அரசுத் துறைகளை நெருங்கிச் செல்லும் வாய்ப்பை பெற்றேன்’’ என்று கூறினார்.