வருமான வரித்துறை விசாரணையில் சிக்குகிறார் கோடியில் புரண்ட யூ-டியூபர் மதன்?

வருமான வரித்துறை விசாரணையில் சிக்குகிறார் கோடியில் புரண்ட யூ-டியூபர் மதன்?
வருமான வரித்துறை விசாரணையில் சிக்குகிறார் கோடியில் புரண்ட யூ-டியூபர் மதன்?

ஆபாசமாக பேசி ஆன்லைன் பப்ஜி விளையாட்டு மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த யூ-டியூபர் மதன் வருமான வரித்துறை விசாரணை வளைத்தில் சிக்குகிறார்

ஆன்லைனில் பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசியும், சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதோடு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் யூ-டியூபர் மதன் மீது இணையதளத்தில் புகார்கள் குவிந்தன. அதன்பேரில் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மதன் நடத்திய யூ டியூப் சேனலுக்கு அட்மினாக இருந்த அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை, நேற்று அதிகாலை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை, தர்மபுரியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது மனைவி கிருத்திகா பெயரில் யூ-டியூப்புக்காக தொடங்கியுள்ள வங்கிக்கணக்கில் ரூ. 4 கோடி இருப்பு உள்ளது தெரியவந்தது. போலீசார் தேடுவது தெரிந்தும் மேலும் பல ஆபாச வீடியோக்களை மதன் யூ-டியூப்பில் அப்லோடு செய்துள்ளார். மேலும் பல வீடியோக்களை அப்லோடு செய்வதற்காக வாய்ஸ் பேசி தயார் நிலையில் தனது லேப்-டாப்பில் வைத்திருந்துள்ளார். தினமும் சுமார் 20 மணிநேரம் பப்ஜி விளையாடிய மதன் அதை வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கைதான பப்ஜி மதன் ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்ய பணம் கொடுங்கள் என்று தனது யூடியூப் சேனல் மூலம் விளம்பரம் செய்துள்ளார். அதன் மூலம் அவர் பண மோசடியில் ஈடுபட்டரா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பப்ஜி விளையாடி, ஆபாசமாக வீடியோவை பதிவு செய்வது எப்படி என்பது குறித்து சைபர்கிரைம் போலீசார் மதனை நடித்துக் காட்ட வைத்தனர்.

பின்னர் அந்த குரலை தங்களிடம் இந்த மதனின் யூடியூப் வீடியோக்களுடன் உள்ள குரலோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். அது மதன் தான் என உறுதி செய்தனர். அவற்றை ஆய்வுக்கூடத்துக்கும் அனுப்பி அறிவியல் பூர்வமான அறிக்கை கேட்டுள்ளனர். மேலும் மதன் அளித்த வாக்குமூலம் அனைத்தையும் சைபர்கிரைம் போலீசார் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

தடை செய்யபட்ட விளையாட்டை போலி ஐபி முகவரி மூலம் விபிஎன் சர்வரை மதன் சட்டவிரோதமாக பயன்படுத்தியது எப்படி என்பது குறித்தும் போலீசார் அவரிடம் கேட்டு வீடியோ பதிவு செய்துள்ளனர். மதனிடம் பணத்தை ஏமாந்தவர்கள் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தால் கூட காவல் துறையில் புகார் அளிக்கலாம். ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் அவர்களது பணம் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

DCPCCB1@GMAIL.COM என்ற முகவரியில் புகார் அளிக்கலாம் எனவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆபாச பேச்சுக்கள் வீடியோ மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்திற்கு கைதான மதன் வருமான வரி செலுத்துவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். கூகுள் பே மூலம் பெற்ற பணத்திற்கு முறையாக வருமானவரி கட்டவில்லை என்பதனையும் அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைதான மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் மட்டும் 4 கோடி ரூபாய் பணம் மற்றும் தாம்பரம், பெருங்களத்தூரில் 45 லட்சம் மதிப்பில் சொகுசு வீடுகள், 2 ஆடி சொகுசு கார்கள், பல லட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் வாங்கி குவித்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு மதனை சைபர்கிரைம் போலீசார் சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் பரமசிவம் வருகிற 3-7-2021 வரை மதனை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் மதனை பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஆர்.சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com