யூ-டியூபர் மதன் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

யூ-டியூபர் மதன் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
யூ-டியூபர் மதன் பேச்சை காதுகொடுத்து கேட்க முடியவில்லை - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

யூ-டியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதை கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன் ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மதன்குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18 என்னும் யூ-டியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் யூடியூபுக்கு பக்கத்துக்கு பார்வையாளர்கள் அதிகமாகி, 7.8 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் சேர்ந்தனர்.

சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். அதன்பின்னர் பப்ஜி மதன் தலைமறைவானார்.

இதனையடுத்து அவர் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் என்கிற மதன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதனின் யூடியூப் சேனலை விரும்பி பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள் எனவும், ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி (கிருத்திகா) நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மதனுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சு காதுகொடுத்து கேட்முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளை கேட்டதாக பதிலளித்தார். அந்த பதிவுகளை கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்துள்ளார்.
அதேசமயம் மதனின் யூடியூப் பதிவுகளை ஒன்றாக சேர்த்து, சிடி-யாகவோ, பென் டிரைவாகவோ தாக்கல் செய்ய காவல் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com