அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற காணி பெண்கள்: வனத்துறை காவலர்களாக தேர்வு
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் காணி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், முதல் முறையாக அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வனத்துறை காவலர்களாக தேர்வாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் வனத்துறையில் காலியாக இருந்த 527 வனக்காவலர் பணியிடங்களுக்கு கடந்த 2019 செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. நீண்ட நாட்களாக வனத்துறை பணியிடங்களில் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கோரிக்கை இருந்த நிலையில் இந்த முறை 99 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான தேர்வில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் வசிக்கும் காணி பழங்குடி இனத்தைச் சேர்ந்த அனுஜா, ஜெயா இருவர் தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளனர்.
முண்டந்துறை வனத்துறை சூழியல் மேம்பாட்டு அதிகாரியின் முயற்சியால், பாளையங்கோட்டை அய்யாசாமி அகாடமி என்ற தனியார் நிறுவனம் காட்டுக்குள் தினந்தோறும் பயணப்பட்டு 35 பேருக்கு பயிற்சி அளித்தது. அதில் 6 பேர் வெற்றிபெற்று நேர்முகத்தேர்வு வரை சென்றனர். இதில் முதற்கட்ட வெற்றியாக இருபெண்கள் தேர்வாகி உள்ளனர்.
தேர்வில் வெற்றிபெற்ற இருபெண்களுக்கும் பணிக்கான ஆணையை வழங்கிய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பழங்குடியினர் பலர் அரசு வேலையில் சேர்வதற்கான ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.