ஊரடங்கு நேரத்தில் ஒரே வாரத்தில் 6 இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காசிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காசிமேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. அவரை பிடித்து விசாரித்ததில் இவர் கடந்த ஒரே வாரத்தில் வடசென்னையில் 6 இடங்களில் கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த ரவுடி மதன் என்கிற லொட்டை மதன் என்பது தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, கடந்த 8 ஆம் தேதி பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஒரு நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 ஆயிரம் ரூபாய் பறித்ததும், கூட்டாளியான ஹிட்டா விஜயுடன் சேர்ந்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரியும் உளவு பிரிவு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதுமட்டுமில்லாமல் அதே நாளில் செம்பியம் பகுதியில் மெடிக்கல் ஷாப்பின் பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் திருடியதும், ஒரு வாரத்தில் 6 இடங்களில் ரூ.1 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மதன் கொள்ளையடிக்க பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும், 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்த எம்கேபி நகர் காவல் உதவி ஆணையர் ஹரிகுமார் தலைமையிலான குழு மதன் அளித்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கூட்டாளி விஜயையும் கைது செய்தனர். இவரிடமிருந்து 3 கத்திகள், பெட்ரோல் வெடிகுண்டு, 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.