திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற ஏழுமலை என்பவரும், சரண்ராஜை காப்பாற்ற வந்த ரேணு கோபால் என்பவரும் உயிரிழந்தனர். சரண்ராஜ் மீதான முன்விரோதத்தால் அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொல்ல முயன்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
சரண்ராஜ் தனது மாட்டுக் கொட்டகையில் உள்ள இரும்புக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஏழுமலை மின்சார ஒயரை எடுத்து வந்து சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சிக் கொல்ல முயன்றுள்ளார். அப்போது கண் விழித்துப்பார்த்த சரண்ராஜ் சத்தம் போடவே, பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரேணுகோபால் ஓடி வந்து ஏழுமலையை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் ஏழுமலை கையில் வைத்திருந்த மின்சார வயரை இருட்டில் தெரியாமல் தொட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து எழுமலை, ரேணு கோபால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தர். இந்த சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: இளைஞரை படுகொலை செய்து ஓடை மணலில் புதைப்பு - கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!