அரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி
திருவள்ளூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அரிசி மூட்டையுடன் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசனின் மகன் ஜெகநாதன் (35). இவரும் இவரது நண்பருமான ஆவடி ஜே.பி எஸ்டேட் பகுதியை சேர்ந்த சரவணனும் நேற்று இரவு அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு பெரிய களக்காட்டூரிலிருந்து சின்னம்மா பேட்டை நோக்கி சென்றனர். அப்போது திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது தண்டவாளத்திற்கு இடையே உள்ள கற்களில் பைக்கின் டயர் சிக்கியது.
இதையடுத்து இருவரும் பைக்கை விட்டு இறங்கி அரிசி மூட்டையுடன் இருந்த பைக்கை மீட்க முயன்றனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் பைக் மீது மோதியது. இதில் பைக்குடன் இருவரும் 500 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.