ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் தாக்கி இரண்டு வட மாநில இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில் தனியார் மழலை பள்ளி ஒன்று உள்ளது. மாண்டஸ் புயலின் காரணமாக நேற்று இரவு வீசிய பலத்த காற்றில் தனியார் மழலை பள்ளியில் உள்ள மரம் ஒன்று முறிந்து மின்சார வயரில் விழுந்ததை அடுத்து, மின்சார வயர் தரையில் அறுந்து கிடந்துள்ளது.
இந்நிலையில், பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இரண்டு வட மாநில இளைஞர்கள் வேலையை முடித்துவிட்டு அவ்வழியாக சென்றபோது மின் வயரை மிதித்துள்ளனர். இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இன்று காலை அதை பார்த்த பிள்ளைப்பாக்கம் கிராம மக்கள் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் இரு சடலங்களையும் கைப்பற்றி இறந்தது யார் என்று விசாரித்து வருகின்றனர்.