போதையில் கார் ஓட்டி விபத்து: 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

போதையில் கார் ஓட்டி விபத்து: 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!
போதையில் கார் ஓட்டி விபத்து: 2 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

சென்னை பாடியில், குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். 

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகர், பாடி மேம்பாலத்தின் கீழ் இன்று காலை இன்னோவா கார் ஒன்று வேகமாக வந்தது. சிறிது நேரத்திலேயே அந்த கார், மின் கம்பத்தில் மோதியது. இதை அங்குள்ள கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த சரசா (65), ஆதிலட்சுமி (50), மோகன் (40) ஆகியோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கார் அருகில் சென்று பார்த்தனர். 

அப்போது திடீரென பின்புறம் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் சரசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த ஆதிலட்சுமி தூக்கி வீசப்பட்டார். மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மோகன் உயிரிழந்தார். ஆதிலட்சுமிக்கு கால் முறிந்தது.

இந்நிலையில், விபத்து ஏற்படுத்திவிட்டு காரில் இருந்த தப்பியோடியவரை அங்குள்ளவர்கள் பிடித்து சராமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். அவர் பெயர் தேவேந்திரன் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போதையில் காரை ஓட்டியதால், இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com