திருச்சி அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் மீது வேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றில் நீர் இல்லாததால் மணல் பகுதியில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது. இதில் காருக்குள் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவர் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி காரில் சென்றபோது விபத்து நேர்ந்ததாகவும் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மற்றொருவர் இறந்த நபரின் மனைவியாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இதையடுத்து ஆற்றுக்குள் விழுந்த காரை காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் கிரேன் உதவியுடன் வெளியே எடுத்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.