சேலத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த மணி என்பவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். அதைப் பயன்படுத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கூட்டாளி செல்வகுமாருடன் சேர்ந்து பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவர் மீதும் சேலம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.