69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 சிலைகள் மீட்பு
69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக் கூடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படும் தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக் கூடத்தில் இருப்பதாக இந்தக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடை கொண்ட திருப்புராந்தகர் சிலையையும், 61 கிலோ எடை கொண்ட தஞ்சை அழகர் சிலையையும் மீட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், நீதிமன்றத்தில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டு, சொந்தமான கோவிலில் வைக்கப்படும் தெரிவித்தார்.