நாகப்பட்டினம் | 20 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்., கதவு ஜன்னல் இல்லாத 32 வீடுகள் .!
தமிழகத்தின் கடற்கரையோரங்கள் மரண ஓலத்தால் அதிர்ந்த அந்த நாளை யாரால் மறக்க முடியும்? குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை அள்ளிக் கொண்டு போனது ஆழிப்பேரலை. இதோ, அந்தப் பெருந்துயரம் நிகழ்ந்து 20 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், நாகூர் அம்பேத்கர் நகர் மக்களின் கண்ணீர் மட்டும் இன்னும் காயவில்லை என்பதுதான் நிதர்சனம்.
சுனாமியால் வீடிழந்தவர்களுக்காக 187 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் என்ன நடந்தது? 155 வீடுகள் கட்டி முடிக்கப்பட, எஞ்சிய 32 வீடுகள் வெறும் சிமெண்ட் கூடுகளாக, கதவு ஜன்னல்கள் கூட இன்றி இன்றும் அரைகுறையாக நிற்கின்றன.
இந்த வீடுகளுக்குப் பட்டா வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் வசிக்கத்தான் வழியில்லை. மழை பெய்தால் வீட்டுக்குள் இருக்க முடிவதில்லை. ரயில் நிலையமே தஞ்சம்... தர்காவே கதி என அந்த மக்கள் ஓடுகிறார்கள். இடிந்து விழும் சிமெண்ட் காரைகளால் உடலில் காயங்கள் என அவர்களது வாழ்க்கை நகர்கிறது.
இதுகுறித்து நாகை நகராட்சி ஆணையர் லீனா சைமனை தொடர்பு கொண்டு கேட்ட போது, தனியார் நிறுவனம் கட்டிய வீடுகள் என்பதால் மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதி கோரியுள்ளதாக தெரிவித்தார். அம்பேத்கர் நகரில் 67 வீடுகள் சேதமடைந்துள்ளது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
நிதி கிடைக்கபெற்றவுடன், இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் 2 லட்சத்து 10 ஆயிரம் ருபாய் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். புனரமைப்பு பணிகளை கட்டட உரிமையாளர்களே மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிகளை நகராட்சி நிர்வாகம் கவனிக்கும் என்றும் நகராட்சி ஆணையர் லீனா சைமன் குறிப்பிட்டார். 20 ஆண்டுகால இருள் விலகுமா? என சுனாமியின் சுவடுகளை மறக்கக் காத்திருக்கின்றனர் நாகை அம்பேத்கர் நகர் மக்கள்.

