சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னைப் பல்லாவரத்திலுள்ள பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சாஜித் (19). இவர் கடந்த 27ஆம் தேதி மாலை தங்கள் பகுதியில் உள்ள மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாஜித்தை பின்தொடர்ந்து வந்த 3 நபர்கள் அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுதொடர்பாக சாஜித் பல்லாவரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல்லாவரத்தை சேர்ந்த கண்ணன் (24), ரமேஷ் (எ) போதை ரமேஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து பல்லாவரம் பகுதியில் சுற்றித்திரிந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக் என்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.