சேலத்தில் அடுத்தடுத்து 2 தொழிலதிபர்கள் கடத்தல்
சேலத்தில் கடந்த இரண்டு நாட்களில் தொழிலதிபர்கள் இரண்டு பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மணி நேற்று முன் தினம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தன்தேரி பேருந்து நிறுத்தம் அருகே அவர் கடத்தப்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த பிரபல பெட்ரோல் பங்க் உரிமையாளர் சுரேஷ் நேற்று மாலை 5 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். பள்ளியிலிருந்து தனது மகனை அழைத்து வருவதற்காக காரில் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆத்தூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்தக் கடத்தல் நிகழ்வுகள் குறித்து ஆத்தூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொழிலதிபர் சுரேஷ் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தொழிலதிபர் சுரேஷை கடத்திச் சென்ற நபர்கள், காரின் பதிவு எண்ணை மாற்றி அதை சேலம் அரசு மருத்துவமனைக்கு முன்பாக விட்டுச் சென்றுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த காரில் பதிந்துள்ள கைரேகை தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மாநகரப் பகுதியில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.