
தூத்துக்குடி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரது மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (47). இவர், சிமென்ட், உப்பு, இரும்பு பொருட்கள் ஆகியவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த நளராஜ் என்பவரது மகன் சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.
இதையடுத்து, சீலன் செல்வராஜ் தனது நண்பர் தூத்துக்குடியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்பவரது மகன் விஜய் ஆகிய இருவரும் ஸ்டேன்லி சாம்ராஜுடன் சேர்ந்து உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளனர். இதையடுத்து, மூவரும் சேர்ந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சீலன் செல்வராஜ், விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்தில் உப்பு, இரும்பு பொருட்கள் வாங்கப் போவதாக போலியான கொள்முதல் ஆணையை காண்பித்துள்ளனர்.
இதையடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி அவருடைய வங்கி கணக்குகளிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ரூ.8 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 741 பணத்தை பெற்றுக் கொண்டு எவ்வித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்டேன்லி சாம்ராஜ், கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சீலன் செல்வராஜ், விஜய் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்த மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.