தாயின் கண் எதிரே குளத்தில் மூழ்கி 9 வயது இரட்டை சகோதரிகள் உயிரிழப்பு
திருச்சி அருகே தாயின் கண் எதிரே குளத்தில் மூழ்கி இரட்டை சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூர் சங்கம்பட்டியில் வசித்து வருபவர் விவசாய கூலி தொழிலாளி வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு 4 மகன்களுக்கு பின், இரட்டை சகோதரிகளாக ஐந்தாவதாக பிறந்தவர்கள் ராமுப்ரியா(9), லெட்சுமிப்ரியா(9). இவர்கள் அருகில் உள்ள வெள்ளைபிச்சம்பட்டி ஊராட்சி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் இந்த சிறுமிகள் இருவரும் தங்களது தாய் கண்ணம்மாளுடன் அருகில் உள்ள குளத்தில் துணிகள் துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது தாய் கவனிக்காத போது இரட்டை சகோதரிகள் குளத்தில் உள்ள தண்ணீரில் தவறி விழுந்து தத்தளித்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கியதை அறிந்த கண்ணம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே இரட்டை சகோதரிகள் உயிரிழந்தனர். அதனையடுத்து அவர்கள் உடல்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூறு ஆய்விற்கு பின் இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வளநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.