’மை டியர் CM சார்’| பாசமாக அழைத்தால் அவர்களுக்கு பிடிக்கவில்லை..! - விஜய் சூசக பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய விஜய் விரைவில் மாவட்டம் முழுதும் தேர்தல் பரப்புரையை நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
அந்தவகையில் 'வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு, உங்க விஜய்... நா வாரேன்...’ என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பரப்புரைக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் டிசம்பர் 20 வரை தேர்தல் பரப்புரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் தவெகதலைவர் விஜய்.
திருச்சியில் பேசி முடித்தபிறகு அரியலூர் சென்ற தவெக தலைவர் விஜய், அரியலூர் மண்ணில் இருக்கும் பிரச்னைகள் குறித்த கேள்விகளை முன்வைத்தார்.
பாசமாக அழைத்தால் பிடிக்கவில்லை..
அரியலூர் பரப்புரையில் திமுக குறித்து பேசிய தவெக தலைவர் விஜய், 505 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியது? முக்கால்வாசி கூட நிறைவேற்றாமல், ‘எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டோம்’ என கதை விடுகிறீர்களே My Dear CM Sir...
ரீல்ஸ் வேறு ரியாலிட்டி வேறு என சொல்லிவிட்டு, இன்று நீங்கள் விடுவதெல்லாம் ரீல்ஸ்தான். அதில் பாதி அறுந்தும் போய்விட்டது.
CM Sir என சொல்லும் முன், “வேண்டாம் வேண்டாம், அவர்களுக்கு ஆசையாகவும் பாசமாகவும் அழைத்தால் பிடிக்கவில்லை” என மதுரை மாநாட்டில் CM Uncle என தான் கூறியது சர்ச்சையானது பற்றி சூசகமாக விமர்சத்தார்.
“செய்வோம் செய்வோம் என சொன்னாங்களே... செய்தார்களா? My Dear CM Sir... ஒன்றிய அரசு செய்வது துரோகம் என்றால் நீங்கள் செய்வது நம்பிக்கை மோசடி. இரண்டுமே ஏமாற்றுவேலைதான், ஜனநாயக குற்றம்தான். ஏமாற்றுவதில் இருவருமே ஒரே வகையறாதான்.
ஒன்றிய பிரதமர், இந்தியப் பிரதமர் என்று மாற்றி மாற்றி பேசுவதில் முதல்வர் வல்லவர். மறைமுக உறவுக்காரர்கள் என ஏன் சொல்கிறோம் என இப்போது புரிகிறதா?” என்று விமர்சித்து பேசினார்.