"தரம்தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது" - வைரலான வீடியோ குறித்து ஆதவ் அர்ஜூனா வருத்தம்!
மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் தவெக சார்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, இருவரும் பேசிய படியே நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில், அண்ணாமலையாவது 10 பேரை வைத்து கொண்டு தேர்தலில் நின்று 20 சதவீத வாக்கு வங்கியை பெற்றார். ஆனால் எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வருவது மாதிரி தெரியவில்லை. பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றி விடும் என்று ஆனந்திடம் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை பற்றி ஒருமையில் பேசியிருந்தார்.
இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், தனது பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் ஆதவ் அர்ஜூனா. அதில், ” அனைவருக்கும் வணக்கம், எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.
என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.
உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு." என்று தெரிவித்துள்ளார்.