திருச்சி| 17 வயது சிறுமியை திருமணம்.. 2 குழந்தைக்கு தந்தையான தவெக நிர்வாகி கைது!
திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள தவெக நிர்வாகி கார்த்திக், மனைவியின் உறவினரான 17 வயது சிறுமியைத் தன்னை திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக கட்டாய திருமணம் செய்ததாக புகார்; ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) அந்தநல்லூர் ஒன்றிய இணை செயலாளராக உள்ள இவர், தனது மனைவியின் உறவினரான 17 வயது சிறுமியைத் தனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என அச்சிறுமியின் பெற்றோருக்குத் தொடர்ந்து கடுமையான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அச்சிறுமியைக் கார்த்திக் கட்டாய ரகசியத் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயார் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், கார்த்திக் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஜீயபுரம் போலீஸார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

