மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். குறிப்பாக, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, அத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு விரைவில், தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்த மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்தச்சூழலில்தான், தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு, திமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. திமுக சார்பில், மதுராந்தகம் (தனி) தொகுதியில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் நிறுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். இவர், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் நின்று வெற்றிபெற்றவர் ஆவார். இந்த முறை தவெக சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுகிறார். இவரும், கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ஆவார். அதேநேரத்தில், அதிமுகவும், நாதகவும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

