"என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை அனுபவித்து வருகிறேன்" - மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா!
கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் துயரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 27 பேரும், ஈரோடு, திண்டுக்கல், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்தனர். இதில் குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பார்ப்பவர்கள் நெஞ்சை கனக்கச் செய்தது..
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் இரண்டாம்கட்ட தலைவர்கள் யாரும் எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்த 2 நாட்களுக்குப் பின் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்துசெல்ல வழியின்றி தவித்து வருகிறேன்.
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன். துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன்” என்று பதிவிட்டு, இறுதியில் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!' என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.