விசிக மீது விமர்சனம்.. கிளம்பிய எதிர்ப்பு.. யூடர்ன் அடித்த ஆதவ் அர்ஜுனா!
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த ஜனவரி 25 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து பேசியிருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா "விசிகவில் திருமாவளவன் உட்பட 20 பேர் மட்டுமே இருக்கிறார்கள். திமுக, விசிகவை அடியாளாக பயன்படுத்துவது அவருக்கு தெரியவில்லை” என்று பேசி இருந்தார். இது அவரது கட்சியிலும் திமுக கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவருக்கு எதிராகவும் கண்டனங்கள் பறந்தன. இதைத் தொடர்ந்து அந்தக் கருத்து தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆதவ் அர்ஜுனா. அதில், ’திருமாவளவன் மீது எனக்கு மரியாதை உண்டு. வி.சி.கவில், தி.மு.கவின் குரலாக செயல்படும் 20 நபர்களை குறிப்பிட்டுத்தான் பேசினேன். ஆனால், என் கருத்து தவறாக சித்தரிக்கப்படுகிறது. தி.மு.கவின் திரிபு அரசியலில், வி.சி.கவினர் சிக்கி விடக்கூடாது' என தெரிவித்தார்.
இந்நிலையில்,நேற்று (ஜனவரி 28) சென்னை ராயப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘’விசிக தலைவர் திருமாவளவன்தான் என்னுடைய கொள்கை ஆசான். எனக்கு முகவரியைக் கொடுத்தது அண்ணன் திருமாதான்; என்றைக்கும் ஆதவ் அர்ஜுனா நன்றி மறந்தது கிடையாது” எனவும் தெரிவித்துள்ளார்.

