“நானும் அபிராமியும் ஒண்ணா?” - டிவி நடிகை நிலானி கதறல்

“நானும் அபிராமியும் ஒண்ணா?” - டிவி நடிகை நிலானி கதறல்
“நானும் அபிராமியும் ஒண்ணா?” - டிவி நடிகை நிலானி கதறல்

சின்னத்திரை நடிகை நிலானி சென்னை, வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “என்னைப்பற்றி இரண்டு நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் பாதிதான் உண்மை. பாதி சித்தரிக்கப்பட்டவை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் தலைமறைவும் ஆகவில்லை. நான் கணவன் இல்லாமல் தனித்து வாழ்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதுவரையிலும் சினிமாவில் எந்தத் தவறும் செய்யாமல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். காந்தி லலித் குமார் என்பவர் மூன்று வருடத்திற்கு முன்பு எனக்கு நண்பராக அறிமுகானார். அவரால் எனக்கு குழந்தைகளை பராமரிக்கும் சிறுசிறு உதவிகள் கிடைத்தன. பின்னர் அவர் என்னை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். நானும் உங்களைப் போன்று யாரும் இல்லாத ஆனாதை எனக்கூறினார். 

எனக்கு அப்போது அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. நான் சினிமாவில் இருந்தாலும், நேர்மையாக இருப்பதால் நடுத்தர குடும்பமாக எனது குழந்தைகளுக்காக வாழ்கிறேன். இதையெல்லாம் அவரிடம் கூறி திருமணத்திற்கு மறுத்தேன். ஆனால் அவர் என்னிடம் ரொம்ப நல்லவர் போல நடந்துகொண்டார். எனக்கு பாதுகாப்பாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டார். மற்ற ஆண்களின் தொந்தரவுகளில் இருந்து என்னை காத்துக்கொள்ள, அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தேன். அவருடனும் பழகினேன். இது உண்மை. அதன்பின்னர் நாங்கள் ஒரு குறும்படத்தில் நடித்தோம். அப்போது அவருடன் நெருக்கமாக ஒரு புகைப்படம் எடுத்தேன். அந்தப் படத்தை என் அனுமதியின்றி, என்னுடைய முகநூல் பக்கத்தில் காந்தி லலித்குமார் பகிர்ந்துவிட்டார். 

அத்துடன் பார்ப்பவர்களிடம் எல்லாம், என்னை தன் மனைவி என அவர் கூறிவந்தார். இதனால் நான் அவரையே திருமணம் செய்யும் நிலைக்கு வந்தேன். இந்நிலையில் தான் அவர் செல்போனை நான் சோதித்து பார்த்தபோது, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பிருப்பது தெரியவந்தது. என்னைப்போன்று பல பெண்களிடம் அவர் கல்யாணம் செய்வதாக பண மோசடி செய்துள்ளார். அவர்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் அவரை திட்டி அனுப்பிவிட்டேன். அவரும் சற்று விலகினார். ஆனால் மீண்டும் என்னை தொல்லை செய்ய ஆரம்பித்துவிட்டார். நான் வீடு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டேன். அப்போது என் வீட்டில் அத்துமீறி நுழைந்து, சமயலறைக்குள் வந்து என் கழுத்தில் கட்டாயமாக தாலி கட்ட முயன்றார். நான் தடுத்துவிட்டேன். என்னைப்போலவே அவர் பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.” என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஸ்டெர்லைட் பிரச்னையின் போது தன்னை பெயிலில் எடுக்க மீண்டும் காந்தி உதவியாக தெரிவித்தார். அதற்கான செலவை தானே பார்த்துக்கொண்டதாகவும் கூறினார். ஆனால் அதன்பின்னர் காந்தியை விட்டு விலகிவிட்டதாகவும், அவரது தற்கொலைக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் கூறினார். இதற்கிடையே தன்னை சமூக வலைத்தலங்களில் பலர் கேலி செய்வதாகவும், குன்றத்தூர் குழந்தைகள் கொலை வழக்கு அபிராமியுடன் தன்னை ஒப்பிடுவதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார். கே.கே.நகரில் காந்தி லலித் என்பவர் சில நாட்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு, நிலானி தான் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com