ஸ்டெர்லைட்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு கொடுக்கும் போராட்டம் நடைப்பெறயுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது எனவும் ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது என்றும் முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு, 3 வாரத்தில் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது. இந்தச் சுழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலை எதிர்ப்புக் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்க உள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.