சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார் டிடிவி ஆதரவாளர் பழனியப்பன்
கட்டட ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில், தினகரனின் ஆதரவாளர் பழனியப்பன் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
நாமக்கல்லில் உள்ள ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் கட்டட ஒப்பந்ததாரர் சுப்ரமணியன். இவர் கடந்த மே மாதம் தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட சுப்ரமணியன் எழுதிய கடிதத்தை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்தக் கடிதத்தில் முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பழனியப்பனின் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜாராகுமாறு பழனியப்பனுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பழனியப்பன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர்களில் பழனியப்பனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.