மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுக்கு டிடிவி தினகரன் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. தோழர் நல்லகண்ணு என்றும், தோழர் ஆர்.என்.கே என்று கம்யூனிஸ்ட் தோழர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படுபவர். அரசியலில் தியாகத்திற்கும், எளிமைக்கும், நேர்மைக்கும் வாழும் சாட்சியாக இருப்பவர் என்று கட்சி வேறுபாடு இன்றி பலராலும் பாராட்டப்படுபவர். போராட்டமே வாழ்க்கை என்று இருந்த அவர் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார். மக்கள் உரிமை சார்ந்த போராட்டங்களில் இன்றும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார் நல்லகண்ணு. தனது 80வது பிறந்தநாளில் கட்சி அவருக்கு அளித்த ஒரு கோடி ரூபாய் நிதியில் ஒரு ரூபாயை பயன்படுத்திக் கொள்ளாமல் அதை அப்படியே கட்சியின் வளர்ச்சிக்கு கொடுத்த தலைவர். அவருடைய 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரன், தனது ட்விட்டரில் நல்லகண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அரசியல் வாழ்வில் தூய்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டு, பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லக்கண்ணுவின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி என் உளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.