எனக்கு வாக்களித்தால் மக்கள் தலையெழுத்து மாறும்: டிடிவி தினகரன்
ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எனக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களின் தலையெழுத்து நல்ல முறையில் மாறப் போகிறது என டிடிவி தினகரன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ்-க்கு வாசன் ஆதரவு தெரிவித்தது அவரது விருப்பம் என்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உங்கள் தரப்பு ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனவே என கேட்டபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அம்மா வேட்பாளராகிய எனது வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. எனவே எதிர்க்கட்சிகள் தேர்தலை நிறுத்த வேண்டும் என சதி செய்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. யார் எந்த நடவடிக்கை எடுத்தாலும் எனது வெற்றி உறுதியாகி விட்டது என்றார்.
12-ஆம் தேதி தேர்தலை ஒருவேளை நான்கு நாட்கள் தள்ளிபோடலாம். அல்லது ஒரு மாதம் கூட தள்ளிபோடலாம். ஆனால் என்னுடைய வெற்றியை யாராலும் தள்ளிபோட முடியாது. தேர்தலில் பணியாற்ற தொண்டர்கள் வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளார்கள் எனவும் கூறினார். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எனக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களின் தலையெழுத்து நல்ல முறையில் மாறப் போகிறது. இந்தியாவிலேயே சிறந்த தொகுதியாக ஆர்.கே.நகர் உருவாக்கப்படும் எனவும் கூறினார்.