பல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..? டிடிவி தினகரன்
பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்ஜியம்’ என காட்டியுள்ளது. அப்படியென்றால் தங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 3-வது இடத்திற்கே தள்ளப்பட்டது. அமமுகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது டெபாசிட்டை இழந்தனர். இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “ மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். அதேசமயம் பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது. அப்படியானால் எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே?.. ஒரு வாக்குச்சாவடியில் அமமுக முகவரின் வாக்கு கூடவா பதிவாகாமல் போயிருக்கும்? இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தான் இதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 10 பேர் அமமுகவை விட்டு செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் சசிகலாவை வரும் 28-ம் தேதி சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.