10 ஆண்டுகளாக ரூ.54 கோடி.. நேற்று லட்டு இன்று பட்டு.. திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் ஊழல் புயல்!
ஆந்திர மாநிலத்தின் திருமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த பத்து ஆண்டு காலமாக ₹54 கோடிக்கும் அதிகமான பட்டு சால்வை கொள்முதல் மோசடி நடந்திருப்பது தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லட்டு பிரசாத நெய் கலப்பட விவகாரம் மற்றும் உண்டியல் காணிக்கை திருட்டு போன்ற நிர்வாகச் சீர்கேடுகள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த புதிய முறைகேடு தேவஸ்தானத்தின் உண்மைத்தன்மை மீது மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோயில் நிர்வாகம் வி.ஐ.பி.க்கள், முக்கிய நன்கொடையாளர்கள் மற்றும் ₹3,000 டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு மரியாதை நிமித்தமாகச் சால்வை போர்த்தி ஆசிர்வாதம் அளிப்பது வழக்கம். இந்தச் சால்வைகள் ரங்க நாயக மண்டபத்தில் வேத பண்டிதர்களால் போர்த்தப்படும். இந்தச் சால்வைகளை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்த நிறுவனங்கள், ஒப்பந்தப் புள்ளியில் தெளிவாகக் கோரப்பட்ட தூய மல்பெரி பட்டுச் சால்வைகளுக்குப் பதிலாக, விலையில் மிகவும் மலிவான 100% பாலியஸ்டர் துணியால் ஆன சால்வைகளை விநியோகித்துள்ளன.
இந்த மோசடியின் மையப்புள்ளியே விலை வேறுபாடுதான். ஒப்பந்ததாரர் ஒரு சால்வைக்கு ரூ.1,389 என அதிக விலைக்குப் பில் போட்டிருக்கிறார். ஆனால், வழங்கப்பட்ட பாலியஸ்டர் சால்வையின் உண்மையான சந்தை விலை வெறும் ₹350 மட்டுமே ஆகும். இதன்மூலம், ஒரு சால்வைக்கு ₹950-க்கும் மேல் மோசடி செய்யப்பட்டு, கடந்த பத்து ஆண்டுகளில் தேவஸ்தான அறக்கட்டளைக்கு மொத்தமாக ₹54 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தச் சால்வைகளின் தரம் குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடு அளித்த புகாரின் அடிப்படையில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய சால்வைகளின் மாதிரிகள் மத்தியப் பட்டு வாரியம் உட்பட இரண்டு ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில், இவை பட்டு அல்ல, முற்றிலும் பாலியஸ்டர் துணியே என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டது. இது தேவஸ்தானத்தின் கொள்முதல் மற்றும் டெண்டர் ஒப்பந்த நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
ஊழல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான அனைத்து டெண்டர்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, விரிவான குற்றவியல் விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தச் சால்வை ஊழல் அம்பலமாவதற்கு முன்னர், திருப்பதியில் நடந்த மற்ற முக்கிய ஊழல் புகார்களும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
கடந்த 2024 செப்டம்பரில், உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. இது தொடர்பாக தற்போது சி.பி.ஐ.யின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல், உண்டியல் பணம் எண்ணும் பரகாமணி மையத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த ரவிகுமார் என்பவர், பக்தர்கள் செலுத்திய வெளிநாட்டு கரன்சிகளைத் திருடி ₹100 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரும் விசாரணை வளையத்தில் உள்ளார்.
உலகி புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதியில், அடுத்தடுத்து நிர்வாக ரீதியிலான ஊழல்கள் வெளிவருவது ஆன்மீகச் சிந்தனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிருப்தியையும் கவலையையும் அளித்துள்ளது.

