கருணாநிதிக்கு சிலை நிறுவ முயற்சி.. தடுத்த காவல்துறை
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு குடியாத்தம் பகுதியில் சிலை நிறுவ முயற்சியை காவல் துறை தடுத்து நிறுத்தியுள்ளது.
50 ஆண்டு காலம் தி.மு.க தலைவரும், 5 முறை தமிழக முதல்வராகவும் இருந்தவர் கருணாநிதி. தனது 95-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக 07.08.2018 அன்று காலமானார். கருணாநிதி மறைவுக்கு நாடு முழுவதும் தொண்டர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த தி.மு.க மாவட்ட பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி. இவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு முதல் முதலாக குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்டுசாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அருகே தி.மு.க கொடி கம்பத்தில் கருணாநிதி உருவ சிலையை நிறுவியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அனுமதியின்றி சிலை வைக்கக் கூடாது என கூறி சிலையை மீண்டும் கிருஷ்ண மூர்த்தியிடமே கொடுத்தனுப்பியுள்ளனர்.
இது குறித்து விசாரித்த போது மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க முயற்சித்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் தீவிர தி.மு.க என்றும் கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்றும் இதன் காரணமாகவே தனது சொந்த செலவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் குடியாத்தம் அடுத்த பரதராமி செல்லும் சாலையில் கருணாநிதிக்கு கோவில் கட்டி வந்துள்ளார். பின்னர் அது தடுக்கப்பட்டு கோவில் இடிக்கப்பட்டது. கோவில் உள்ள வைக்க அப்போது தயார் செய்யப்பட்ட சிமெண்டு சிலையை பாதுகாத்து வந்த கிருஷ்ண மூர்த்தி தற்போது கருணாநிதி மறைந்ததையடுத்து அந்த சிலைக்கு வர்ணம் பூசிகுடியாத்தம் பகுதியில் வைக்க முயற்ச்சித்துள்ளார் என தெரிய வந்தது.

