இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள திருச்சி கடைவீதிகள் - பல கோடி வர்த்தகம் பாதிப்பு!

இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள திருச்சி கடைவீதிகள் - பல கோடி வர்த்தகம் பாதிப்பு!
இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ள திருச்சி கடைவீதிகள் - பல கோடி வர்த்தகம் பாதிப்பு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள முக்கியமான கடைவீதிகள் அனைத்தும், இன்றிலிருந்து 3 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முக்கிய கடைவீதிகளில் கடைகள் எல்லாம் திறக்கப்படாமல் காட்சியளித்தன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் நடைபெறும்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குடிநீர் விநியோக குழாய் மற்றும் பாதாள சாக்கடை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு உட்பட்ட திருச்சியின் சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி மற்றும் சூப்பர் பஜார் ஆகிய பகுதிகளில் அதிகளவிலான குடியிருப்புகள் உள்ள நிலையில், சில்லறை வியாபாரம் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி பொறியாளர்கள், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு, சிங்காரத்தோப்பு வணிக சங்கத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் 19வது மாமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் முன்னிலையில், கடந்த மார்ச் 4ஆம் தேதியன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்றிலிருந்து 8ஆம் தேதிவரை 3 நாட்கள் கடை மூடல்!

கலந்தாலோசனை கூட்டத்திற்கு பிறகு, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பணியின் அவசர அவசியம் கருதி, இன்று முதல் 06.03.2023, 07.03.2023 மற்றும் 08.03.2023 ஆகிய மூன்று தினங்களில், சிங்காரத்தோப்பு தெருவில் உள்ள, சூப்பர் பஜார் முதல் பெரியகடை வீதி சந்திப்பு வரை இருக்கும் அனைத்து கடைகள், சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவைகளை திறக்காமல் இருப்பதற்கு ஒப்புதல் அளிப்பதாக கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, சூப்பர் பஜாரில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்!

இந்நிலையில் இன்று (06.03.2023) முதல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள சிங்காரத்தோப்பு, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. எப்பொழுதும் மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும் இப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- திருச்சி மாநகராட்சி

நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் இப்பகுதியில், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் நடைபெறுவதால் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் 09.03.2023 முதல் கடைவீதி சாலைகள் திறக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும், இப்பணியினால் ஏற்படும் சிரமங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com