திருச்சி: உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட ரூ.75 லட்சம் பறிமுதல்
செய்தியாளர்: லெனின்
திருச்சி ரயில்வே சந்திப்பில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி வந்த ஹவுரா விரைவு ரயில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டபோது, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த வேதமாணிக்கம் என்பவரது மகன் ஆரோக்கிய தாஸ் (49) என்பவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவர் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த ஆய்வாளர் செபாஸ்டின், வருமானவரித் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருமான வரித்துறை துணை இயக்குனர் ஸ்வேதா இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.