திருச்சி: திமுக எம்எல்ஏவின் பணியை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி

திருச்சி: திமுக எம்எல்ஏவின் பணியை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி
திருச்சி: திமுக எம்எல்ஏவின் பணியை பாராட்டி போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி

திமுக எம்எல்ஏவை பாராட்டி சுவரொட்டி ஒட்டிய அதிமுக மாவட்ட இணைச் செயலாளர், நேரில் வாழ்த்தும் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட கதிரவன், சுமார் 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் 2ஆம் அலையால் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது. மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர்.

இதனை அறிந்த எம்எல்ஏ கதிரவன் தொகுதியில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் உடைகளை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து மக்களின் பசியாற்றினார்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக பூட்டிய நிலையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தூய்மைப் படுத்தி மக்கள் பயனளிக்கும் வகையில் திறந்து வைத்து மக்களின் குறைகளை தினசரி கேட்டறிந்து வருகிறார். அதோடு மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதியிலும் மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட தேவைகளை அறிந்து ரூ.75 லடசத்திற்கு மேல் தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் தான் இவரது செயலை பாராட்டி திருச்சி சமயபுரம் பகுதியைச் சேர்ந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முருகானந்தம் என்பவர் கதிரவன் எம்எல்ஏ-வின் பணியை பாராட்டி மண்ணச்சநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியதோடு நேரில் சந்தித்து பாராட்டியும் உள்ளார்.

இதுகுறித்து அதிமுக பிரமுகர் முருகானந்தனிடம் கேட்டபோது, “மண்ணச்சநல்லூர் தொகுதியில் இதுவரை இருந்த எம்எல்ஏக்கள் யாவரும் செய்யாததை இவர் தனது சொந்த செலவில் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார். அவரது செயலை பாராட்டுவதில் எவ்வித தவறும் இல்லை. இது குறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com