கோவை பீளமேடு பகுதியில் டைடல் பார்க் அலுவலகத்தை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர், அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
“TIDEL மற்றும் எல்காட் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்துள்ளோம். கோவையில் அதிகமான வளர்ச்சியை கொண்டு வருவதற்கான புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. நிலம் வாங்கவும், புதிய வளர்ச்சிகளை, கட்டடங்களை கொண்டு வருவதற்கான வேலைகளையும் முதல்வர் அனுமதியுடன் செய்து வருகிறோம்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜகவும் ஒன்றிய அரசும் சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆக்கப்பூர்வமான வேலைகளை தமிழகத்திற்கு அவர்கள் செய்ய வேண்டும்.
இதைவிட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம் திமுக. இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக வெளியே வருவோம். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்து வெளியே வருவோம். திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால் இன்னும் வேகமாக வெளியே வரும். அப்படியான இயக்கம் இது. திமுக, கலைஞரின் வளர்ப்பு. தளபதியின் தம்பிகள் நாங்கள்.
இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் நாங்கள் கிடையாது. கைதின்போது (அமைச்சர் செந்தில் பாலாஜி கைது) நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதெல்லாம் (கைது) சின்ன மேட்டர். நிறைய பார்த்து விட்டோம். செந்தில் பாலாஜி சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கிறார். பதவியில் இருப்பதால் அவர்கள் ஆடுகிறார்கள்.
திமுக மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கு நற்பெயர் உருவாகி இருக்கிறது. அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளைக் கொண்டு சேர்க்கிறார்.
மத்திய அரசுக்கு திராவிட மாடல் அரசு ஒரு சிம்ம சொற்பமாக இருக்கிறது. அதைக் கண்டு பயப்படுகின்றனர். அதனால் அவர்களிடம் இருக்கும் துறைகளை ஏவி ஏதாவது செய்ய முடியுமா என பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யார் என்பதை முதல்வர் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்” என்றார்.