சென்னை அருகே கொடூரம்: ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட டிராவல்ஸ் அதிபர்
சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் சம்பங்கி நகரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). டிராவல்ஸ் அதிபரான இவர் அவரது வீட்டின் அருகே ஆட்டோவில் சென்ற போது அதேபகுதியை சேர்ந்த தமிழ்,சாலமன் உள்ளிட்ட மூன்று பேர் மகேந்திரனை மடக்கியுள்ளனர். அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.அவர்களிடம் தப்பிய மகேந்திரன் அங்கிருந்த மளிகை கடைக்குள் சென்று புகுந்துள்ளார். அப்போதும் அவரை விடாமல் ஓட ஓட துரத்தி சென்ற மூவரும் மகேந்திரனை மளிகை கடைகள் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மகேந்திரனை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே மகேந்திரன் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலையாளி தமிழ்,சாலமன் ஆகியோர் சம்பங்கி நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியிலேயே மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனை மகேந்திரன் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு மகேந்திரன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் தமிழை திருநின்றவூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ஆத்திரமடைந்த தமிழ்,சாலமன் மற்றும் அவரது கூட்டாளிகள் மகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு அதேபகுதியில் ஓட ஓட விரட்டி கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ், சாலமன் உள்ளிட்ட மூவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை நடந்த பகுதியில் மகேந்திரனின் உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.