“குழந்தை சுஜித் உயிரிழப்பு” - கண்ணீர் சிந்தும் தமிழகம்

“குழந்தை சுஜித் உயிரிழப்பு” - கண்ணீர் சிந்தும் தமிழகம்

குழந்தை சுஜித் உயிரிழந்திவிட்டான் என்ற செய்தி தமிழகத்தையே கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது. 

எப்படியும் குழந்தை சுஜித் காப்பாற்றப்பட்டுவிடுவான் என்ற எண்ணத்தில், ஆசையில், விருப்பத்தில்தான் லட்சக்கணக்கான தமிழக மக்கள் நேற்றிரவு தூங்கச் சென்றிருப்பார்கள். எத்தனையோ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று நாட்கள் தாண்டியும் நம்பிக்கையை சற்றும் தளராமல்தான் எல்லோரும் இருந்தார்கள். 

அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.40 மணியளவில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது என்ற செய்தி வெளியான தருணத்தில் பலரும் அதிர்ந்து போனார்கள். அந்த தருணத்தில் இருந்து குழந்தை எப்படியாவது மீட்கப்பட்டு விடுமா? என்ற ஏக்கம், இந்த செய்தி சென்றடைந்த அனைவரது உள்ளத்திலும் குடிகொண்டது. குழந்தை இன்று மீட்கப்பட்டுவிடுமா? நாளை மீட்கப்பட்டு விடுமா என ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஏங்கினார்கள். 

ஏனென்றால் அந்த தாயின் பாசப்போராட்டம் நம் எல்லோரையும் உறைய வைத்துவிட்டது. அந்த தாயின் முகத்திற்காகவாவது குழந்தை மீட்கப்பட்டுவிட வேண்டும் என எல்லோரும் நினைத்தார்கள். குழந்தை சுஜித்திற்காக தமிழகத்தின் மூளை முடுக்கெடுல்லாம் சாதி, மதங்களை கடந்து பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. நேற்று இரவு வரை கூட பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 

ஒவ்வொரு மீட்பு நடவடிக்கையாக தோல்வியை சந்திக்கும் போதும் ஒருவித விரக்தி உண்டானது. இருப்பினும், அடுத்தடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இருந்ததால் நம்பிக்கையை கொஞ்சமும் குறைய விடாமல் இருந்தார்கள். பிரமிக்கும் வகையில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் கூட நம்பிக்கை அதிகமாக இருந்தது.

ஆனால், எல்லா நம்பிக்கையும் தற்போது சிதைந்துவிட்டது. எல்லா பிரார்த்தையும் பலன் அளிக்காமல் போய்விட்டது. 80 மணி நேர போராட்டமும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. குழந்தை சுஜித் தற்போது நம்மிடம் இல்லை. அவரது தாய் இந்த செய்தியை எப்படிதான் எதிர்கொள்ளப் போகிறார் என்பதை நினைத்தாலே எல்லோரது இதயமும் கனக்கிறது. 

எப்படியும் குழந்தை சுஜித் மீண்டு வந்துவிடுவான் என ஏங்கிய எல்லோருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 80 மணி நேரத்தில் குழந்தையை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோரின் உழைப்புகள் இருந்தது. அவர்களும் குழந்தையை எப்படியும் மீட்டுவிடலாம் என ஆசையுடன் தீவிரமாக பணியாற்றினார்கள். ஆனால், அவர்களுக்கும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. 

தமிழக மக்கள் மத்தியில் குழந்தை சுஜித்தின் மரணம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்த மரணம் மக்கள் மனங்களில் இருந்து நீங்க நீண்ட நாட்கள் ஆகும். இந்த அனுபவத்தில் இருந்தாவது உரிய படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com