திருச்சி: அதிகாரிகள் அலட்சியம்? 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
திருச்சியில் சாக்கடை திறந்திருப்பதாக பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் அலட்சியத்தால் 5 வயது சிறுவன் சாக்கடையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். பெயிண்டரான இவருக்கு நளினி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் ஐந்து வயதுடைய மூத்த மகன் யஸ்வந்த் நேற்று இரவு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தான். இவனை திடீரென காணவில்லை என பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் தேடியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் விழுந்து யஸ்வந்த் இறந்துள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தில்லைநகர் போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் இங்கு திறந்த வெளியில் உள்ள சாக்கடை மற்றும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக மூடப்படாமல் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை இது தொடர்பாக புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
இறந்துபோன யஸ்வந்த் வீட்டுக்கு முன்பாக 6 அடி அகலமும் 7 அடி ஆழமும் கொண்ட திறந்த வெளி சாக்கடையும் உள்ளது. அப்பகுதியில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு திறந்த வெளியில் சாக்கடை கழிவு நீர் ஓடுகிறது. உடனடியாக இந்த சாக்கடையை மூடி மற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த திறந்த வெளி சாக்கடை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது “ உடனடியாக இந்த திறந்த வெளி சாக்கடை கால்வாய் மூடப்படும். விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்கு, ஆழமான சாக்கடைகள் மற்றும் மழைநீர் வடிகால் பாதைகளில், உடனடியாக சிமெண்ட் கான்கிரீட் மூடிகள் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

