ராமநாதபுரம்| ஸ்பீக்கர் விழுந்து 6 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்த கோரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி கோகிலா. இவர்களது ஆறு வயது மகள் சுகவதி. இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
கோரை குளம் கிராமத்தில் கடந்த வாரம் முளைப்பாரி கோவில் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. கோவில் திருவிழாவிற்காக கட்டப்பட்டிருந்த 6 அடி உயரம் கொண்ட ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்) திருவிழா முடிந்ததும் கழட்டப்பட்டு, கோவில் அருகே உள்ள மைக்-செட் உரிமையாளர் வீரக்குமார் என்பவர் வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பீக்கர் விழுந்து சிறுமி பலி..
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி சுகவதி ஸ்பீக்கர் பெட்டியின் அருகே விளையாண்டு கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக ஸ்பீக்கர் பெட்டி சுகவதி தலையில் விழுந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுமியை சுகவதி மயங்கி விழுந்ததை அடுத்து சிறுமியை சிகிச்சைக்காக சத்திரக்குடி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் தூக்கி சென்றுள்ளனர்.
அங்கு சுகவதியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்யாமல் உடலை பெற்றுக்கொண்ட சிறுமியின் தந்தை விஜயகாந்த் காவல்துறைக்கு தகவல் கொடுக்காமல் கோரைகுளம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் உடலை புதைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் தாய் கோகிலா தன்னிடம் சொல்லாமல் ஏன் சிறுமியின் உடலை புதைத்தீர்கள் உடலை தோண்டி எடுத்து உடற்கூராய்வு சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில், நேற்று சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமி உயிரிழந்தது தொடர்பாக சத்திரக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.