பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மாரடைப்பால் மரணம்
சென்னை மயிலாப்பூரில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் காவலராக இருந்த அருண்காந்தி, நேற்று சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் ஊடரங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதியம் 3.15 மணியளவில் அருண் காந்தி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகச் சொல்லபடுகிறது. இதனையடுத்து அருகில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்காந்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனைதொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. காவலரின் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் ஏற்படாத வண்ணம் காவல்துறை தலைவரும், தமிழக அரசும் அக்கறை காட்ட வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.