கள்ளக்குறிச்சியில் சாலை விதிகளை பின்பற்றி இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டியுள்ளார் டிஎஸ்பி.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் ஹெல்மெட் அணிந்து - சாலை விதிகளை பின்பற்றி இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளுக்கு கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் மரக்கன்றுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமலும் சாலை விதிகளை முறையாக பின்பற்றாமலும் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களுக்கு சாலை விதிகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு சாலை விதிகளை பின்பற்றாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். இதில் விதிகளை மீறுவோர் மீது அபதாரம் விதிப்பது காவல்துறையின் கடமையாகும். சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் அபராதத்திற்கு பயந்து காவல்துறையை கண்டவுடன் வேற்று பாதையில் பயணிப்பவர்கள் மத்தியில் அவர்களை அழைத்து ஆலோசனை வழங்கியதோடு மட்டுமல்லாமல், சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றுபவர்களை பாராட்டும் விதமாக போக்குவரத்து காவல் துறை செயல்படுவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய செய்தியாகும்.