சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: வேறோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து பாதிப்பு #Video
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் ஈக்காட்டுத்தாங்கலில் ராட்சத மரம் ஒன்று சாலையில் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. இதனால் கிண்டியிலிருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சென்னையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 14 செமீ மழை பதிவாகியுள்ளது. தரமணியில் 12 செமீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செமீ மழையும் பெய்துள்ளது.
கிண்டி-வேளச்சேரி சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளது. கிண்டியில் கத்திப்பாரா பாலத்தின் அடிப்பாதையில் மிகுந்த மழைநீர் தேங்கியுள்ளதால், அங்கு வாகன ஓட்டிகள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர். பல வாகனங்கள் பாதியிலேயே மழைநீர் புகுந்து பழுதடைந்து நின்றுவிடுவதால், இறங்கி தள்ளிகொண்டே செல்லும் அவல நிலையும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.