'ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?' - நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு பேச்சு!
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்று அறிஞர் அண்ணா அன்றே கேட்டார் என டி.ஆர்.பாலு மக்களவையில் பேசியுள்ளார்.
தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், இந்த விவகாரம் மக்களவையிலும் எதிரொலித்துள்ளது. தமிழகத்தின் உரிமையை பறீக்காதீர்கள் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு,''தமிழக கட்சிகள் மட்டுமின்றி, மக்களும் கூட நீட் தேர்வை எதிர்த்து வருகின்றனர். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத ஆளுநர் தமிழகத்தில் இருந்து என்ன பயன்?. மக்களின் கோரிக்கைகளை மதிக்காத ஆளுநர் ஏதற்கு. இன்று அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவர் கூறியதை நினைவுகூற விளைகிறேன். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் ஏன் என்று அறிஞர் அண்ணா அன்றே கேட்டார். ஆளுநரின் இந்த செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று கூறியுள்ளார்.

